ஆழ்வார்திருநகரி ஆதிநாத பெருமாள் கோவில் வரலாறு

ஊர் -ஆழ்வார் திருநகரி

மாவட்டம் -தூத்துக்குடி

மாநிலம் -தமிழ்நாடு

மூலவர் -ஆதிநாதன் ,ஆதிப்பிரான் நின்ற திருக்கோலம்.

தாயார் -ஆதிநாத நாயகி ,திருக்குருகூர் நாயகி.

தல விருட்சம் -புளியமரம்.

தீர்த்தம்- தாமிரபரணி ,குபேர தீர்த்தம்.

திருவிழா- குரு பெயர்ச்சி

திறக்கும் நேரம் -காலை ஏழு முப்பது மணி முதல் பகல் 12 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை.

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 89 வது திவ்ய தேசம்.

தல வரலாறு:

காரியார் என்னும் குறுநில மன்னனுக்கும் ,உடைய நங்கைக்கும் மகனாக பிறந்தார் சடகோபர். இவர் பிறந்ததில் இருந்து கண் மூடிய நிலையிலும், அழாமலும், சாப்பிடாமலும் இருந்தார். இதை கண்ட பெற்றோர் மிகுந்த வேதனை அடைந்து சடகோபரை கோயிலுக்கு அழைத்து வந்தனர். அப்போது சடகோபர் ஓடி சென்று அங்கு இருந்த புளிய மரத்தடியில் இருந்த பொந்துக்குள்அமர்ந்தார் .அதன்பின் அவரை ஒருவராலும் அசைக்க முடியவில்லை. இப்படியாக 16 ஆண்டுகள் உணவில்லாமல் இருந்தார். ஆனால் உடல் வளர்ச்சி குன்றவில்லை. அப்போது வடநாட்டு யாத்திரைக்கு சென்றிருந்தார் மதுரகவி ஆழ்வார். இனிமையான சொற்களால் பாடுவதில் வல்லவர் என்று புகழப்பட்ட மதுரகவி ஆழ்வார்.

அயோத்தியில் இருந்தபடியே தென் திசை நோக்கி வணங்கும் போது அந்த திசையில் ஒரு பேரொளியைக் கண்டார். அந்த ஒளியை நோக்கி நடந்து வந்த மதுரகவி ஒரு புளிய மரத்தடிக்கு வந்ததும் மறைந்துவிட்டது .அந்த மரத்தடியில் ஒரு மகாஞானி இருப்பதை கண்டார் மதுரகவி ஆழ்வார். ஞானமுத்திரையுடன் மோன நிலையில் இருந்த சடகோபரை எழுப்ப நினைத்து அவர் அருகில் ஒரு கல்லை போட்டார். சடகோபர் கண்விழித்தார் அவ்விருவரின் இடையே பாடல் மூலமாக உரையாடல் நிகழ்ந்தது. இந்நிகழ்வில் இருந்து சடகோபன் “நம்மாழ்வார்’ என்ற பெயரில் மதுரகவியாழ்வார் அழைத்தார். நம்மாழ்வாரை மதுரகவியாழ்வார் தன் குருவாக ஏற்றுக்கொண்டார் .இதனாலேயே இத்தலம் நவ திருப்பதியில் குரு ஸ்தலமாக விளங்குகிறது .இங்கு பெருமாளை விட நம்மாழ்வாருக்கு தான் சிறப்பு. இங்குள்ள புளியமரம் ஏழு கிளைகளோடு உள்ளது .இரவில் உறங்காத காரணத்தினால் இம்மரம் உறங்காப்புளி என்று அழைக்கப்படுகிறது.

நவ திருப்பதியில் இது ஐந்தாவது திருப்பதி. நவகிரகத்தில் குருவுக்குரிய தலமாகும். நம்மாழ்வாருக்கு ஆதிநாத பெருமாள் குருவாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் மதுரகவியாழ்வார் தன் குருவான நம்மாழ்வாரை மங்களாசாசனம் செய்துள்ளார் .தாமிரபரணி ஆற்றங்கரையில் கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் மூன்று பிரகாரங்களுடன் கோயில் அமைந்துள்ளது. பெருமாள் இங்கு சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூலவரின் பாதங்கள் பூமிக்குள் இருப்பதாக ஐதீகம். 5 ஆயிரம் வருடம் பழமையான நம்மாழ்வார் வீற்றிருந்த புளியமரம் இன்றும் இங்கு உள்ளது. இங்கு புளிய மரமாக லட்சுமன் இருப்பதாகவும் ,பெருமாள் பிரம்மச்சரிய யோகத்தில் இருப்பதாகவும் ஐதீகம். லட்சுமி பெருமாளை

அடைய இங்கு தவம் இருந்ததால் பிரம்மச்சாரியாக இருந்த பெருமாள், லட்சுமியை மகிழ மாலையாக தன் கழுத்தில் அணிந்து கொண்டதாக தலபுராணம் கூறுகிறது. வைணவர்கள் ஸ்ரீரங்கத்தை பரமபத வாசல் எனவும் ,ஆழ்வார்திருநகரி பரமபதத்தில் எல்லை எனவும் கூறுவார்கள். பெருமாளின் விமானத்தை விட நம்மாழ்வாரின் விமானம் சற்று பெரியது. மரத்தால் செய்யப்பட்டதைப்போலவே கல்லால் ஆன நாதஸ்வரம் ஒரு அடி நீளத்தில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

Recent Post