இரண்டாம் திருமணம்: யாருக்கு வரம்? யாருக்கு சாபம்?

பொதுவாக எந்த தசை நடந்தாலும் தசைஅல்லது புத்தி நாதனுக்கு சுக்கிரன், ராகு அல்லது சனி, சுக்கிரன் சம்பந்தம் ஏற்படும் போது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் உண்டு.

இரண்டாம் திருமணம் யாருக்கு வரம்

இளைய தாரத்தைப் பற்றி சொல்லக் கூடிய ஏழு, பதினொன்றாம் இடம் சுப வலுப்பெற்றால் இரண்டாம் திருமண வாழ்க்கை அதிர்ஷ்டத்தை தரும்.

பதினொன்றாம் அதிபதி கேந்திர திரிகோணத்தில் ஆட்சி, உச்சம் பெற்று ஏழாம் அதிபதியுடன் சம்பந்தம் பெற்றால் இளைய மனைவியால் யோகம் உண்டு.

அதே போல் இரண்டு, ஐந்து, ஒன்பது, பதினொன்றாம் அதிபதி வலுப்பெற்று தசை நடத்தினால் இளையதாரத்தால் பணம், புகழ் கிட்டும். ஏழு, பதினொன்றாம் அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றால் இரண்டாம் திருமணத்திற்கு பிறகு பதவி, புகழ், அந்தஸ்து, கவுரவமான வாழ்க்கை உண்டு.

லக்னம் ஏழாம் இடத்திற்கு சுக்ரன் செவ்வாய், சனி செவ்வாய் சம்பந்தம் இருப்பவர்கள் இரண்டாம் திருமணத்தில் நிம்மதியாக இருக்கிறார்கள்.

இரண்டாம் திருமணம் யாருக்கு சாபம்

பதினொன்றாம் இடம் அசுப வலுப்பெற்றால் இரண்டாம் வாழ்க்கை துரதிர்ஷ்டத்தை தரும். ஏழு, பதினொன்றாம் அதிபதிகள் மூன்று, நான்காம் இடத்துடன் சம்பந்தம் பெற்றால் கிளிபோல் மனைவி இருந்தாலும் குரங்கு போல் ஒரு வைப்பாட்டி வைத்த கதை தான்.

பதினொன்றாம் அதிபதி ஆறு, எட்டு, பனி ரெண்டாம் இடத்துடன் சம்பந்தம் பெற்று குருப் பார்வை பெற்றால் முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாம் திருமணம் செய்து இளைய தாரத்தால் வம்பு, வழக்கு கட்டப் பஞ்சாயத்து என கடனாளியாக வாழ்வார்கள்.

சகிப்புத் தன்மை இல்லாதவர்கள் மற்றும் தவறான இன்பத்திற்காக இரண்டாவது வாழ்க்கையை தேடினால் அது குறிப்பிட்ட காலத்திற்கு மேல் கசக்கும். ஜனன கால ஜாதகத்தில் சுக்ரன் கேது, செவ்வாய் கேது சம்பந்தம் இருப்பவர்கள் அனுசரித்து போகாமல் பல திருமணம் செய்தால் சாபம் நிறைந்ததாக இருக்கும்.

உளவியல் ரீதியாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முயன்றால் வாழ்க்கைத் துணையின் இழப்பிற்காக மறு திருமணம் செய்யலாம். உண்மையில் வாழவே முடியாத வகையில் பிரச்சினை இருந்தாலும் இரண்டாம் திருமணம் நடத்தலாம்.

Recent Post