ப்ளீச் செய்வதால் முகத்தில் பிரச்சனை வருமா?

நாகரீக மோகத்தால் இன்றைய இளம் கல்லூரி பெண்கள் முதல் 50 வயது தாண்டிய பெண்மணிகள் வரை தங்களின் முகத்தை அழகாக வைத்துக்கொள்ள முகத்திற்கு ப்ளீச் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

பெண்களின் முகத்தில் கரும்புள்ளிகள், பருக்கள், எண்ணெய் தன்மையும் கொண்டவர்கள் ப்ளீச் செய்கின்றனர். இவ்வாறு ப்ளீச் செய்யும் பெண்கள் இதற்கென உள்ள பியூட்டி பார்லர்களுக்கு செல்லாமலும் தாங்களாகவே தரமற்ற மலிவான விலையில் கிடைக்கும் கிரீம்களை வாங்கி வீட்டிலேயே முகத்திற்கு ப்ளீச் செய்கின்றனர். இது பல்வேறு உபாதைகளுக்கு வழி வகுக்கிறது.

பெண்கள் முகத்திற்கு ப்ளீச் செய்வதால் கண்டிப்பாக நிறம் மாறாது. முகத்தில் உள்ள முடியின் நிறம் மட்டுமே மாறும். அடிக்கடி முகத்திற்கு ப்ளீச் செய்வதால் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உண்டு. இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தான் செய்ய வேண்டும்.

தோல்வியாதிகள், ஜலதோஷம் உள்ளவர்கள் மற்றும் முகத்தில் பருக்கள் உள்ளவர்களும் கண்டிப்பாகச் செய்யக் கூடாது. சில பெண்கள் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் செய்வதால், அவர்களின் முகத்தில் தோல் சுருங்கி, வெண்புள்ளிகள் தலையில் உள்ள முடிகள் உதிர்ந்து, பாதிக்கப்படுகிறார்கள். மேலும் கண்களுக்கு லேசர் சிகிச்சை லென்ஸ் பொருத்தப்பட்டு, அவர்கள் தங்களது முகத்திற்கு ப்ளீச் செய்வதால், கண்கள் பாதிக்கப்படுகிறது.

சைனஸ் நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் செய்யும் போது, மூக்கில் நீர் கோர்த்து பாதிப்பு அதிகமாகும். மாநிறமாக உள்ள பெண்கள் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை முகத்திற்கு ப்ளீச் செய்தால் முகத்தில் மாற்றம் தெரியும். வெள்ளை நிறமுடைய பெண்கள் முகத்திற்கு ப்ளீச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

பெண் குழந்தைகள் முதல் வயதான பெண்களும் தங்களின் வீட்டிலேயே தேன் பால் அல்லது பாலாடையை சம அளவு கலந்து, முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து முகத்தை சுத்தமான நீரில் கழுவினால் போதும். மேலும் பயத்தம் மாவுடன் கடலை மாவு சேர்த்து முகத்தில் பூசி குளிக்கலாம்.

இயற்கையான வெள்ளரிக்காய், கேரட், தக்காளி போன்றவற்றை நன்றாக கழுவி சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்வதால் ப்ளீச் செய்யாமலேயே முகம் அழகு பெறும்.