திருக்கண்ணமங்கை பக்தவத்சல பெருமாள் கோவில் வரலாறு

ஊர் : திருக்கண்ண மங்கை

மாவட்டம் : தஞ்சாவூர்

மாநிலம் : தமிழ்நாடு.

மூலவர் : பக்தவத்சலபெருமாள்,பத்தராவிப்பெருமாள்

தாயார் : கண்ணமங்கை நாயகி

ஸ்தலவிருட்சம் : மகிழ மரம்

தீர்த்தம் : தர்ஷன புஷ்கரிணி

சிறப்பு திருவிழாக்கள் : சித்ராபவுர்ணமியை ஒட்டி 10 நாள் திருவிழா நடக்கிறது

திறக்கும் நேரம் : காலை 8:00 மணி முதல் 12:00மணி வரை, மாலை 5:00மணி முதல் இரவு 8:30மணி வரை.

தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது முதலில் கற்பக விருட்சம் மற்றும் காமதேனு வெளிப்பட்டது. கடைசியில் மகாலட்சுமி தோன்றினாள். முதலில் அவள் பெருமாளின் தோற்றத்தைக் கண்டு மனதில் நிறுத்தி இத்தலம் வந்து பெருமாளை அடைய தவம் இருந்தாள். இதை ஞானத்தால் அறிந்த பெருமாள் தன் காவலரிடம் முகூர்த்த நாள் குறித்து வரச்சொல்லி பின் லட்சுமிக்கு காட்சி கொடுத்தார். முப்பத்து முக்கோடி தேவர்களுடன் பெருமாள், இங்கு வந்து லட்சுமியை திருமணம் செய்தார். பெருமாள் பாற்கடலை விட்டு வெளியே வந்து லட்சுமி திருமணம் செய்ததால் பெருமாளுக்கு “பெருங்கடல் ‘என்ற திருநாமம் ஏற்பட்டது. திருமகள் இத்தலத்தில் தவம் இருந்ததால் “லட்சுமி வனம்’ என பெயர் ஏற்பட்டது.

பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 27 வது திவ்ய தேசம். ஒரு தலத்திற்கு இருக்க வேண்டிய விமானம், ஆரண்யம், மண்டபம் ,தீர்த்தம், ஷேத்ரம், நதி, நகரம் என்று ஏழு லட்சணங்களும் அமையப் பெற்றதால் சப்த புண்ணிய ஷேத்திரம் என்ற பெயர் பெற்றது.

இவ்விடத்தில் நடந்த திருமணத்தை காண தேவர்கள் கூட்டமாக வந்து அனுதினமும் இத்திருக்கோலத்தைக் கண்டு கொண்டே இருக்க வேண்டும் என நினைத்தார்கள். எனவே தேவர்கள் தேனீக்கள் வடிவெடுத்து, கூட்டிட்டு அதில் இருந்து கொண்டு தினமும் திருமாலின் தரிசனம் கண்டு மகிழ்கிறார்கள். இன்றும் கூட தாயார் சன்னதியின் வடபுறத்தில் ஒரு தேன்கூடு உள்ளது. இந்த தேன்கூடு எவ்வளவு காலமாக உள்ளது என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் இந்த தேனீக்கள் பக்தர்களை ஒன்றும் செய்வதில்லை. இவை 108 திருப்பதிகளில் இது தனிப்பெரும் சிறப்பம்சமாகும்.

மோட்சம் வேண்டுபவர்கள் ஓர் இரவு மட்டும் இங்கு தங்கினால் போதும் என்பது நம்பிக்கை. சிவபெருமான், நான்கு உருவம் எடுத்து இத்தளத்தில் நான்கு திசைகளிலும் காத்து வருகிறார். பொதுவாக எல்லா கோயில்களிலும் நான்கு திருக்கரங்களுடன் விளங்கும் விஷ்வக்சேனர் ,பெருமாளின் சார்பாக லட்சுமியை சந்திக்க சென்றதால் இரண்டு திருக்கரங்களுடன் அழகிய வடிவில் காட்சிகொடுக்கிறார்.

மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்த போது, வானத்தை அளந்த காலை பிரம்மன் ,தன் கமண்டல நீரால் அபிஷேகம் செய்தார். அதிலிருந்து ஒரு துளி இவ்விடத்தில் விழுந்தது. அதுவே தர்ஷன புஷ்கரணி ஆனது. தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க அலைந்த சந்திரன், இந்த புஷ்கரணி கண்டான். இதைப் பார்த்த கணத்திலே, அவனது சாபம் தீர்ந்தது.

நாலாயிரத்தவ்ய பிரபந்தத்தை தொகுத்த நாதமுனிகளுக்கு, திருக்கண்ணமங்கையாண்டான் என்ற சீடர் ஒருவர் இவ்வூரில் பிறந்து பெருமாளிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளார். கோயிலை சுத்தம் செய்து பெருமாளே அடைக்கலம் என்று இருந்தார்.

ஒரு நாள் இவர் தேவபாராயணம் செய்து கொண்டே, நாய் வடிவம் கொண்டு மூலஸ்தானத்திற்குள் ஓடி ஜோதியாகி இறைவனுடன் கலந்தார். இன்றும் ஆனி மாதம் திருவோண நட்சத்திரம் ,இவரின் மகா நட்சத்திரமாக கொண்டாடப்படுகிறது. இவரது பெயரே இத்தலத்திற்கு திருக்கண்ணமங்கையாண்டான் என நிலைத்துவிட்டது.

Recent Post