பாகற்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு பெரிதும் உதவியாக இருப்பது நாம் உணவோடு எடுத்துக்கொள்ளும் காய்கறிகளே… அவ்வாறு நாவிற்கு கசப்பை தந்தாலும், உடலுக்கு நன்மைத்தரும் பாகற்காய் பற்றி பார்ப்போம்.

பாகற்காயில் வைட்டமின் பி1, பி2, பி3 ,சி, மக்னீசியம், ஃபோலேட் (Folate), சிங்க், பாஸ்பரஸ், மாங்கனீஸ், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் பாகற்காயில் நிறைந்துள்ளன இவை அனைத்தும் உடலுக்கு நன்மை பயக்குகின்றன.

நீரிழிவு

நீரிழிவு நோய்க்கு எதிராக பாகற்காய் சிறப்பாக போராடுகிறது. இதில் சாரன்டின் (Charantin) என்ற வேதிப்பொருள் உள்ளது. பாகற்காயை அடிக்கடி எடுத்துக் கொள்ளும்போது அது ரத்தத்தில் கலந்து இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. இதனால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். பாகற்காயுடன் இஞ்சி, வெந்தயம், சோம்பு சேர்த்து கடுகு எண்ணெயில் சமைத்து சாப்பிட்டால் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

மலச்சிக்கலை போக்கும்

பாகற்காயில் நார்சத்து அதிகமாக உள்ளதால் நாம் சாப்பிட்ட உணவு நன்கு செரிமானமாக உதவுகிறது. இது மூலம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை பாகற்காய் போக்குகிறது.

குடலை பாதுகாக்கும்

பாகற்காயை ஜூஸ் போட்டு குடித்தால், குடலில் உருவாகும் புழுக்கள், ஒட்டுண்ணிகளைக் கொல்ல உதவும். ஒவ்வாமை, வீக்கம், கட்டிகளையும் பாகற்காய் நீக்கும்.

சிறுநீரகத்தை பாதுகாக்கும்

சிறுநீரகம், சிறுநீர்ப்பை மற்றும் அது தொடர்பான உறுப்புக்கள் அனைத்தையும் சிறப்பாக பாதுகாக்க பாகற்காய் உதவுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்கவும் பாகற்காய் பயன்படுகிறது. வாரம் ஒருமுறை பாகற்காய் சமைத்து சாப்பிட்டு வர சிறுநீரகத்திற்கு நல்லது.

தோலை பாதுகாக்கும்

பாகற்காய் சாற்றை எலுமிச்சைச் சாறுடன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் ஆறு மாத காலம் குடித்துவர, முகப்பரு பிரச்சனை நீங்கும். மேலும், சிரங்கு, அலர்ஜி, அரிப்பு, படர்தாமரை, சொரியாஸிஸ், போன்ற தோல் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்கும்.

புற்று நோயை தடுக்கும்

பாகற்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை அடிக்கடி நாம் உணவில் எடுத்துக் கொண்டால் அது புற்று நோய்க்கு வழிவகுக்கும் நச்சு செல்களை அழித்து உடலை காக்கிறது.

நோயெதிர்ப்பு சக்தி

பாகற்காயில் அதிகமாக காரத்தன்மை மற்றும் அமிலத்தன்மை இருக்கிறது. இதனை அடிக்கடி உணவில் எடுத்துக்கொண்டால் ரத்தத்தில் வெள்ளையணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்து நோயெதிர்ப்பு சக்தியை உடலுக்கு அளிக்கிறது. இதனால், உடலை நோய் தொற்றிலிருந்து காக்கிறது.

கல்லீரலை பாதுகாக்கிறது

கல்லீரலில் தேவையற்ற நச்சு கிருமிகள் அதிகளவில் சேருவதாலும், அழற்சியாலும் கல்லீரல் பாதிக்கப்படுகிறது. இதற்கு, வாரத்திற்கு இரண்டு, மூன்று முறை பாகற்காய் உணவில் சேர்த்துக் கொண்டால் கல்லீரலில் இருக்கும் நச்சு கிருமிகளை அகற்றி கல்லீரலை ஆரோக்கியமாக பாதுகாக்கிறது. அல்லது, தினமும் ஒரு கப் பாகற்காய் ஜூஸ் குடித்துவர, கல்லீரல் பிரச்னைகள் நீங்கும்.

சுவாசத்தை சீராக்கும்

பாகற்காய் இலை, துளசி இலை இரண்டையும் ஒன்றாக அரைத்து தேனில் கலந்து தினமும் காலையில் சாப்பிட வர ஆஸ்துமா, சளி, இருமல் போன்றவற்றிற்கு நல்ல மருந்தாக அமையும்.

எச்சரிக்கை!

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு, அதேபோல் பாகற்காயை அளவோடு எடுத்துக்கொள்வதுதான் உடலுக்கு ஆரோக்கியம். அளவுக்கு மீறினால் மேலே கூறியதற்கு எதிராக செயல்பட தொடங்கிவிடும்.

சர்க்கரை நோயாளிகள் தினந்தோறும் பாகற்காய் உணவில் சேர்த்து கொள்வது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது. கர்ப்பிணி பெண்கள் பாகற்காய் சாப்பிடக்கூடாது.

Recent Post

RELATED POST