கருடனை இந்த கிழமைகளில் வணங்கினால் நன்மை உண்டாகும்

வைணவ புராணங்களில் விஷ்ணுவின் பெரிய திருவடியாக கருடன் போற்றப்படுகிறார். அது மட்டுமின்றி வைணவ சமயத்தின் பெருமாள் கோவிலில் மூலவரை வணங்குவதற்கு முன்பு கருடனை வணங்க வேண்டும். என்பது வைணவ ஆகமத்தின் நியதியாகும்.

ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீர்யம், அதீத சக்தி, தேஜஸ் என்ற ஆறு விதமான குணங்களுடன் கருடன் திகழ்கிறார்.

மகாவிஷ்ணு பல்வேறு விதமான வாகனங்களில் அருள்பாலித்தாலும், கருட வாகனத்தில் எழுந்தருளி இருப்பது மிகவும் சிறப்பாக பார்க்கப்படுகிறது. கருடன் பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்குகிறார்.

கருடன் மங்கள வடிவானவர். வானத்தில் கருடன் வட்டமிடுவதும், கத்துவதும் நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது.

கோவிலில் கும்பாபிஷேகம், யாகம் போன்ற சிறப்பு வழிபாடுகள் நடக்கும்போது கோயிலுக்கு மேலே கருடன் வட்டமிடுவதை இன்றும் காணலாம்.

கருடனை எந்தெந்த கிழமைகளில் வணங்கினால் என்ன பலன் கிடைக்கும்?

ஞாயிற்று கிழமைகளில் கருட தரிசனம் செய்வதால் நோய்கள் நீங்கி நலம் உண்டாகும்.

திங்கட்கிழமையில் கருடனைத் தரிசித்தால் துன்பங்களும், துயரங்களும் விலகி இன்பமான வாழ்க்கை அமையும்.

செவ்வாய்க்கிழமையில் கருடனை தரிசித்தால் துணிவும், மகிழ்ச்சியும் பிறக்கும்.

புதன் கிழமைகளில் கருடனைத் தரிசித்தால், பகைவர்கள் உங்களை விட்டு விலகுவார்கள். செய்யும் செயலில் வெற்றி உண்டாகும்.

வியாழக்கிழமைகளில் கருடனைத் தரிசித்தால், நீண்ட ஆயுளும் செல்வங்களும் கிடைக்கும்.

வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கருடனை தரிசனம் செய்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

கருட தரிசனம் செய்வது பெருமாளே நேரில் வந்து நமக்கு வெற்றி வாழ்த்து சொல்வதற்கு சமம் ஆகும்.

Recent Post