பட்டாசு உருவான கதை தெரியுமா?

பட்டாசு உற்பத்தி 2000 ஆண்டுகளுக்கு முன்பே சீனாவில் உருவாக்கப்பட்டது. சீனாவில் சமையலின் போது பயன்பட்ட உப்பு (பொட்டாசியம் நைட்ரேட் சேர்மம்) நெருப்பில் தவறி விழுந்துள்ளது. அப்போது எழுந்த திடீர் தீச்சுவாளைதான் பட்டாசிற்கு தேவையான கரித்தூளை கண்டறிய உதவியது.

துவக்கத்தில் தீச்சுவாளையை உருவாக்க கரியும் கந்தகமும் பயன்பட்டுள்ளது. இந்த கலவையை மூங்கில் குழாயில் அடைத்து வைத்து பட்டாசாகப்
பயன்படுத்தியுள்ளனர்.

சாங் பேரரசர் காலத்தில் (960-&1279) லிடியான் என்னும் துறவியினால் பட்டாசு விரிவாக்கம் பெற்றது. இவர் லியு யாங் நகரின் அருகில் வாழ்ந்துவந்தார்.

சீன வருட பிறப்பு கொண்டாட்டத்தின்போது மூங்கிலில் கரித்தூள் அடைத்த
இந்த பட்டாசுகள் தீய சக்திகளை அப்புறப்படுத்த வெடிக்கப்பட்டன. இந்த பழங்கால பட்டாசில் சத்தம் மட்டுமே வந்தது.

உலகில் மிகுதியாக பட்டாசு தயாரிக்கும் நாடு சீனா உலக பட்டாசுகளில் 90
விழுக்காடு சீனாவில் தயாரிக்கப்படுகிறது.

பட்டாசுகளின் பரவல் 

சீனர்கள் மூங்கில்களையும், மரத்துண்டுகளையும், வெடி மருந்தையும் கொண்டு வானில் சீரிப்பாய்ந்து சென்று வெடித்த வாணங்களை உருவாக்கினர்.

1279 இல் சீனாவில் ஊடுருவிய மங்கோலியர்கள் இந்த தொழில் நுட்பத்தை கற்றுக் கொண்டனர். சீனாவுக்கு வந்துசென்ற ஆராய்ச்சியாளர்கள் இதை அறிந்துகொண்டு தங்கள் நாடுகளில் பரப்பினார்கள்.

பட்டாசுகளின் வளர்ச்சி 

1400-களில் இத்தாலியின் ஃப்ளோரன்ஸ் நகரில் பட்டாசு உற்பத்தி துவங்கியது.

பிரெஞ்சு பொறியியளாளரான அமேதி பிரென்சுவாஃபிரெசியர் எழுதிய டிரீட்ஸ் ஆன் ஃபயர் ஒர்க்ஸ் என்னும் புத்தகம் 1706 இல் வெளியிடப்பட்டது.
அதன்பின் பட்டாசு தயாரிப்பவர்கள் இந்த புத்தகத்தை பின்பற்றியே தயாரித்தனர்.

தற்போது நாம் பயன்படுத்தும் வண்ணமயமான பட்டாசுகள் தயாரிப்பு 1830 இல் துவங்கியது. பல வேதிப் பொருட்களை பயன்படுத்தி இத்தாலியர்கள் வண்ணமயமான பட்டாசுகளை தயாரித்தனர். ஏப்ரல் 18 பட்டாசு தினமாக சீனாவில் கொண்டாடப்படுகிறது.

சிவகாசி பட்டாசுகள் 

1922இல் கல்கத்தாவில் ஜப்பானை சேர்ந்த சிலர் தீப்பெட்டித் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது இந்தியாவிலேயே கல்கத்தாவில் மட்டுமே தீப்பெட்டி தயாரிப்பு தொழில் நடைபெற்று வந்தது. அப்போது சிவகாசியிலிருந்து பி.ஐயன், ஏ.சண்முகம் ஆகியோர் தீப்பெட்டி தொழிலை கற்றுக்கொள்ள கல்கத்தாவுக்கு அனுப்பப்பட்டனர். பின்னர் இவர்கள் சிவகாசி திரும்பி 1928இல் தீப்பெட்டி தொழிற்சாலையைஉருவாக்கினர். அதன் பின்னரே சிவகாசியில் பட்டாசு உற்பத்தி தொடங்கியது.

இந்தியாவில் 90 விழுக்காடு பட்டாசு தயாரிப்பு சிவகாசியில் மேற்கொள்ளப்படுகிறது. சீனாவில் தீமைகளை அழித்து நன்மை
பிறக்கும் விழாவிற்காக அதிகம் பயன்படுத்திய பட்டாசு, இந்தியாவின் தீபாவளிக்கும் அதே காரணத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.