இமையவரப்பன் கோவில் வரலாறு

ஊர் – திருச்சிற்றாறு

மாவட்டம் -ஆலப்புழா

மாநிலம் – கேரளா

மூலவர் – இமையவரப்பன்

தாயார் – செங்கமலவல்லி

தீர்த்தம் – சங்க தீர்த்தம் ,சிற்றாறு

திருவிழா – வைகுண்ட ஏகாதசி ,திருவோணம்.

திறக்கும் நேரம் – காலை 5 மணி முதல் பகல் 10 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 7:30 மணி வரை

தல வரலாறு ;

பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 72 வது திவ்ய தேசம் ஆகும். தர்மன் பாரதப்போரில் தன் குருவான துரோணாச்சாரியாரை கொல்வதற்காக ஒரு பொய் கூறினான்.

தர்மன் உண்மையை மட்டுமே சொல்வான் என்பதால் அவனை விட்டு துரோணரின் மகன் அஸ்வத்தாமன் இறந்து விட்டதாக சொல்லும்படி செய்தனர். அஸ்வத்தாமன் என்பது ஒரு யானை அந்த யானை இறந்து விட்டதாக மெல்லிய குரலில் சொல்லி, அஸ்வத்தாமன் என்ற பெயரை பலமாக சொல்லவே துரோணாச்சாரியார் நிலைகுலைந்து போன சமயத்தில், அவர் திட்டமிட்டு கொல்லப்பட்டார்.

தர்மன் தான் சொன்ன பொய்யினால் தான் துரோணாச்சாரியார் கொல்லப்பட்டார் அவர் இறப்பதற்கு நாமே காரணம் என நினைத்து தர்மன் மனம் வருந்தினான். பின் போர் முடிந்து மன அமைதிக்காக இத்தலத்திற்கு வந்து தவம் இருந்ததாகவும், கோயிலை புதுப்பித்ததாகவும் கூறப்படுகிறது.

தர்மர் இத்தலத்திற்கு வந்து வழிபாடு செய்வதற்கு முன்பே தேவர்கள் இங்கு வந்து திருமாலைக் குறித்து தவம் இருந்தனர். இவர்களது தவத்தில் மகிழ்ந்த பெருமாள், தந்தைக்கு நிகராக தரிசனம் கொடுத்தார். இதனால்தான் இத்தலப் பெருமான் “இமையவரப்பன்’ என அழைக்கப்படுகிறார்.

கோயில் அமைந்துள்ள நகரத்தின் பெயர் செங்குன்றூர். மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இத்தல பெருமாள், சிவனுக்கு தரிசனம் தந்துள்ளதாக புராணம் கூறுகிறது.

கோயில் சுற்றுப் பிரகாரங்களில் அமைந்துள்ள விளக்குகள் வர்ணம் பூசப்பட்டு வரிசையாக இருப்பது மிகவும் அழகாக உள்ளது. இத்தல பெருமாளிடம் தவறு செய்தவர்கள் வருந்தி மன்னிப்பு கேட்டால் உடனே மன்னிப்பு கிடைக்கும் என்பது ஐதீகம்.

Recent Post