அருள்மிகு குடமாடு கூத்தன் திருக்கோயில்

ஊர்: அரியமேய விண்ணகரம்

மாவட்டம்: நாகப்பட்டினம்

மாநிலம் : தமிழ்நாடு.

மூலவர் : குடமாடு கூத்தன்

தாயார் : அமிர்தவல்லி

தீர்த்தம்: அமிர்த தீர்த்தம்

சிறப்பு திருவிழாக்கள்: வைகாசி விசாகம், தை மாதத்தில் கருட சேவை

திறக்கும் நேரம்: காலை 9:00 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 4:00 மணி முதல் இரவு 6:00 மணி வரை.

தல வரலாறு

உதங்கர் சிறு வயது முதலே வைதர் என்பவரிடம் வேதம் பயின்று நன்கு கற்றுத் தேர்ந்தார். அவர் குருவிற்கு தட்சணை கொடுக்க விரும்பியபோது. குருவின் பத்தினி அந்நாட்டின் சக்கரவர்த்தியின் மனைவி அணிந்திருந்த குண்டலங்களை கேட்டார்.

அக்கணமே மகாராணியிடம் சென்று குண்டலங்களை வாங்கி பெற்று வரும் வழியில், அவருக்கு உடல் சோர்வும், மிகுந்த பசியும் மற்றும் தாகம் எடுத்தது. அப்போது அவ்வழியே மாடு மேய்த்த இடையனை கண்டு, அவன் தலையில் இருந்த பானையில் உள்ளதை கேட்டார்.

அச்சிறுவன் அதில் கோமியம், மாட்டு சாணம் இருப்பதாக சொன்னான். உதங்கர் யோசித்த வேளையில், இதைதான் குரு வைதரும் அருந்தினார் என்று அச்சிறுவன் கூறியவுடன் பானையில் உள்ளதை முனிவர் பருகிய நேரத்தில் தட்சன் என்பவன் அவ்வழியே வந்து, முனிவரின் கமண்டலத்தை எடுத்து ஓடினான்.

முனிவர் தட்சனை துரத்தவே ஒரு மரப் பொந்துக்குள் மறைந்து கொண்டான். அவ்வழியே குதிரையில் வந்த மற்றொருவரை கண்ட இடையன், முனிவரிடம் குதிரையில் வந்த அவரிடம் உதவி கேளுங்கள் என்று சொன்னார். அவ்வாறே கேட்டார் முனிவர். குதிரைக்காரரும் மரப் பொந்துக்குள் குதிரையின் வாயில் அக்னி வரவழைத்தான், சூடு தாங்காத தட்சன் வெளியில் வந்து கமண்டலத்தை கொடுத்து சென்றான். உதங்கர் அவ்இருவருக்கும் நன்றி சொல்லி குருவிடம் திரும்பி சென்றான்.

இவையெல்லாம் ஞானதிருஷ்டியில் கண்ட குரு “உன் குரு பக்தியை சோதிக்கவே மகாவிஷ்ணு இடையனாகவும், இந்திரன் குதிரையின் அக்னியாகவும் வந்தனர் என்று உரைத்தார். மற்றும் அந்த பானையில் இருந்தது “அமுதம்’ எனவும், அதை பருகியதால் உன்னால் அந்த அக்னியின் உஷ்ணத்தை தாங்க முடிந்தது என விளக்கினார். மனம் உருகி மகாவிஷ்ணுவை வேண்டியதால், இத்தளத்தில் வெண்ணை நிரம்பிய குடத்துடன் காட்சி கொடுத்தார்.

பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 29 வது திவ்ய தேசம். கிருஷ்ணர் அமர்ந்த கோலத்தில் தரையில் வெண்ணெய் பானையை வைத்து, அதன் மீது ஒரு காலை வைத்த நிலையில் அருள் புரிகிறார். ஆடிக் கொண்டு வந்தவர் என்பதால் “குடமாடு கூத்தன’’ என்றழைக்கப்படுகிறார். திருநாங்கூரில் உள்ள 11 திவ்யதேசங்களில் இத்தலமும் ஒன்று. இவ்வூருக்கு “அரியமேய விண்ணகரம்’ என்ற பெயரும் உண்டு. இங்கு கொடிமரம் கிடையாது, பீடம் மட்டுமே.

Recent Post