அருள்மிகு பேரருளாளன் திருக்கோயில்

ஊர்: செம்பொன்செய்கோயில்

மாவட்டம்: நாகப்பட்டினம்

மாநிலம் : தமிழ்நாடு.

மூலவர் : பேரருளாளன்

தாயார் : அல்லிமாமலர் நாச்சியார்

தீர்த்தம்: நித்ய புஷ்கரிணி, கனகதீர்த்தம்

சிறப்பு திருவிழாக்கள்: பெருமாளின் நட்சத்திரமான ஐப்பசி சுவாதியின் பிரமோற்சவம் நடக்கிறது. தை அமாவாசைக்கு மறுதினம் திருநாங்கூரில் நடைபெறும் 11 கருட சேவைக்கு இந்த பெருமாளும் எழுந்தருளுகிறார்

திறக்கும் நேரம்: காலை 7:00 மணி முதல் 10:00மணி வரை, மாலை 6:00மணி முதல் இரவு 8:00மணி வரை.

தல வரலாறு

பெருமாள் ஸ்ரீ ராமாவதாரத்தில் ராவணனை கொன்று பிரம்மஹத்தி தோஷம் பெற்றார். ராமர் ராவணனை வதம் முடித்து அயோத்தி திரும்பும் வழியில் த்ருடநேத்ர முனிவர் ஆசிரமத்தில் தங்கினார். அப்போது ராமருக்கு ஏற்பட்ட தோஷத்தை நிவர்த்தி செய்ய சில ஆலோசனைகளை கூறினார் முனிவர்.

அதன்படி ராமரும் ஒரு தங்கத்தினாலான மிகப்பெரிய பிரம்மாண்டமான பசுவின் சிலை செய்து அதனுள் அமர்ந்து நான்கு நாள் தவம் செய்து ஐந்தாவது நாள் அந்த சிலையை ஒரு அந்தணருக்கு தானமாக கொடுக்க சொன்னார். இப்படி செய்ததால் ராமரின் தோஷம் தீர்ந்தது. அந்த அந்தணர் பசுவின் சிலையை விற்று இக்கோயிலை கட்டியதால், இத்தலம் செம்பொன்செய் கோயில் என பெயர் பெற்றது.

பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 31 வது திவ்ய தேசம். 108 திருப்பதிகளில் பெருமாள் தன் கோயிலை தானே கட்ட உதவியது இத்தலத்தில் மட்டும்தான். கிழக்கு பார்த்து நின்ற கோலத்தில் செம்பொன்னரங்கர், ஹோரம்பர், பேரருளாளன் என்று திருநாமங்களுடன் காட்சிக்கொடுக்கிறார்.

இழந்த செல்வத்தை மீட்டுத் தரும் தலம் என இக்கோவிலை கூறுகின்றனர். அந்தணர் ஒருவர் செல்வம் இழந்து வறுமையில் வாடிக் கொண்டிருந்தார் அவர் “ஓம் நமோ நாராயணாய’ என மூன்று நாட்களில் 32 ஆயிரம் தடவை, இத்தல பெருமாளிடம் மந்திரத்தை உச்சரித்தார். இந்த மந்திரத்தில் மகிழ்ந்த பெருமாள், இவனுக்கு செல்வங்களை அளித்து மன மகிழ்வுடனும் வாழ அருள் புரிந்தார்.

Recent Post