அருள்மிகு செங்கண்மால் திருக்கோயில்

ஊர்: திருத்தெற்றியம்பலம்

மாவட்டம்: நாகப்பட்டினம்

மாநிலம் : தமிழ்நாடு.

மூலவர் : செங்கண்மால், பள்ளிகொண்ட ரங்கநாதர்

தாயார் : செங்கமல வல்லி

தீர்த்தம்: சூரிய புஷ்காரிணி

சிறப்பு திருவிழாக்கள்: வைகுண்ட ஏகாதசி

திறக்கும் நேரம்: காலை 6:00 மணி முதல் 11:00 மணி வரை, மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.

தலவரலாறு

பூமியை தூக்கி பாதாள உலகத்தில் மறைத்து வைத்து விட்டான் இரண்யாட்சன் என்ற அசுரன். அதைக் கண்டு அஞ்சிய தேவர்கள் முனிவர்கள் அனைவரும் பெருமாளிடம் சென்று முறையிட்டனர். மகாவிஷ்ணு, பூமியை காப்பாற்ற புறப்பட்ட வேளையில் மகாலட்சுமியும், ஆதிசேஷனும் பெருமாளை பிரிய மனமில்லாமல் வேதனையுடன் காணப்பட்டனர். இதை கண்ட மகாவிஷ்ணு எல்லாம் நன்மைக்கே என்று கூறி, அவர்கள் இருவரையும் ‘பலாசவனம்’ சென்று என்னை தியானித்து இருங்கள்.

அங்கே சிவனும் வருவார். நான் வந்து உங்களுக்கு அனுக்கிரகம் செய்கிறேன் என்றார். அத்துடன் கலியுகம் முழுவதும் அங்கேயே தங்கி உலகத்தை காத்து ரட்சிக்க போகிறேன் என்று அருளினார். பின் வராக அவதாரம் எடுத்து இரணியனை அழித்து, பூமியை இருக்க வேண்டிய இடத்தில் வைத்து சுழல விட்டார். பிறகு தான் வாக்கு கொடுத்ததைப் போல் மகாலட்சுமி ஆதிசேஷன் மற்றும் சிவனுக்கு இத்தலத்தில் காட்சி கொடுத்தார். பின் போர் புரிந்த களைப்பு தீர அழகான கண்களுடன் பள்ளிகொண்டார். ஆகவே இத்தலப் பெருமான் செங்கண்மால் ரங்கநாதர் என்றழைக்கப்படுகிறார்.

பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 34 வது திவ்யதேசம். ஸ்ரீரங்கம் சென்று வணங்கினால் என்ன பலனோ திருநாங்கூரில் பள்ளிகொண்ட பெருமாளை தரிசித்தால் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. கிழக்கு பார்த்து ஆதிசேஷன் மீது நான்கு பள்ளி கொண்ட நிலையில் காட்சி கொடுக்கிறார். இத்தலப் பெருமானை வணங்கினால் அரசாளும் வல்லமை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Recent Post