சௌந்தரராஜ பெருமாள் கோவில் வரலாறு

ஊர்: நாகப்பட்டினம்
மாவட்டம்: நாகப்பட்டினம்
மாநிலம் : தமிழ்நாடு.
மூலவர் : சௌந்தரராஜப்பெருமாள்
தாயார் : சௌந்திரவல்லி
ஸ்தலவிருட்சம்: மாமரம்
தீர்த்தம்: சார புஷ்கரிணி
சிறப்பு திருவிழாக்கள்: தை, புரட்டாசி சனிக்கிழமையில் விசேஷ பூஜை, ஆனி உத்திரம் 10 நாள், பங்குனி பிரமோற்சவம் 10 நாள்.
திறக்கும் நேரம்: காலை 7:30 மணி முதல் 12:00மணி வரை, மாலை 5:00மணி முதல் இரவு 9:00மணி வரை.

தல வரலாறு

உத்தான பாத மகாராஜனின் மகன் துருவன். சிறுவனாக இருந்தபோது நாரதரிடம் இத்தளத்தின் அருமை பெருமைகளை அறிந்து, உலகம் முழுவதும் தனக்கே அடிமையாக இருக்க வேண்டும் என்று மகாவிஷ்ணுவிடம் வேண்டி தவமிருந்தான். இவனது தவத்தை கலைக்க தேவர்கள் பல தடைகளை ஏற்படுத்தினர். இருந்தும் தவத்தை முழுமையாக முடித்தான் துருவன். அவன்முன் மகாவிஷ்ணு தோன்றி மிகுந்த பிரகாசத்துடன் கருடன் மீது அமர்ந்து பேரழகு பொருந்தியவராக காட்சி கொடுத்தார்.

மகாவிஷ்ணுவின் பேரழகில் மயங்கிய துருவன் தான் கேட்க வந்த வரத்தை மறந்து, அவரது சௌந்தர்யமான அழகை கண்டு நான் இந்த இறைவனுக்கு அடிமையாக இருக்கிறேன் என்று, தன் தவறை உணர்ந்து மனம் உருகி பெருமாளிடம் வேண்டினான். இந்தப் பேரழகை எப்போதும் தரிசிக்கும் வரம் தரவேண்டும் என கேட்டுக்கொண்டான். பெருமாள் தனது அழகான திருக்கோலத்தை துருவனுக்கு காட்டி, இந்த இடத்திலேயே தங்கினார். அழகான இவருக்கு “சௌந்தரராஜ பெருமாள்’ என்று பெயர் உண்டாயிற்று.

பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 19வது திவ்ய தேசம். நான்கு யுகம் கண்ட இப்பெருமாள் நின்ற, கிடந்த, இருந்த, கோலத்தில் காட்சி கொடுக்கிறார். நரசிம்மர் இங்கு எட்டு கரத்துடன் அஷ்டபுஜ நரசிம்மராக காட்சி கொடுக்கிறார்.

அதேபோல், இங்கு அஷ்டபுஜ துர்க்கையின் சக்தி அற்புதமானது. இத்தல பெருமாளின் அழகில் மயங்கி 9 பாசுரங்களை பாடி, பின் பத்தாவது பாடலில் தான் இத்தலத்தின் பெயரை குறிப்பிடுகிறார் திருமங்கையாழ்வார். கண்டன், சுகண்டன் என்ற இரு அந்தண சகோதரர்கள் மக்களுக்கு மிகவும் இடைஞ்சல் கொடுத்து வந்தனர்.

அப்போது ஒரு நாள் இவர்கள் அறியாமலே சாரப் புஷ்கரணியில் நீராடினார்கள். உடனே அவர்கள் பாவம் நீங்கி வைகுண்டம் சென்றனர். மக்களும் நிம்மதி அடைந்தனர். இவர்களது சிற்பங்களை பெருமாள் சன்னதியில் வைத்துள்ளார்கள். தசாவதாரங்களை விளக்கக்கூடிய செப்புத் தகிட்டிலான மாலை பெருமாளின் இடையை அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.

ஆதிசேஷன் இங்கு சாராபுஷ்க்காரணி என்று தீர்த்தம் உண்டாக்கி, அதன் கரையில் தவம் இருந்ததால், பெருமாள் நாகத்தை தன் படுக்கையாக ஏற்று கொண்டார். இதை பொருட்டு இத்தலம் நாகப்பட்டினம் பெயர் பெற்றது.

Recent Post