ஸ்தலசயனப் பெருமாள் கோவில் வரலாறு

ஊர் -மகாபலிபுரம்

மாவட்டம் -காஞ்சிபுரம்

மாநிலம் -தமிழ்நாடு

மூலவர் -ஸ்தலசயனப்பெருமாள்

தாயார் -நிலமங்கைத் தாயார்

தலவிருட்சம் – புன்னை மரம்

தீர்த்தம் – புண்டரீக புஷ்கரணி

திருவிழா – வைகுண்ட ஏகாதசி

திறக்கும் நேரம் – காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை

தல வரலாறு ;

பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 64 வது திவ்ய தேசம் ஆகும். ஒரு காலத்தில் புண்டரீக மகரிஷி என்பவர் அடர்ந்த காடுகளாக இருந்த மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் தவம் புரிந்தார். இவர் அங்குள்ள குளத்தில் மலர்ந்திருந்த தாமரை மலர்களை எடுத்து திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள நாராயணனின் பாதத்தில் சமர்ப்பிக்க நினைத்து, பூக்களை கூடையில் கொண்டு செல்லும் போது குறுக்கே கடல் இருந்தது.

எனவே பெருமாள் மீது கொண்ட பக்தியால், அவரது கைகளால் அந்த கடல் நீரை வெளியேற்ற இரவு பகலாக பல ஆண்டுகள் தண்ணீரை வாரி இறைத்தார். நான் கொண்ட பக்தி உண்மையானால் இந்த கடல் நீர் வற்றட்டும் ,எனக்கு பாதை கிடைக்கட்டும், இந்த பூக்கள் அது வரை வாடாமல் இருக்கட்டும் என்றார்.

அப்போது அவர் முன்பு ஒரு முதியவராக வந்த பெருமாள், அவரை சோதிக்கும் வகையில் “கடல் நீரை இறைக்கிறீரே !இது சாத்தியமா? உருப்படியாக ஏதாவது செய்யலாம் இல்லையா? எனக்கேட்டு, எனக்கு பசியாக உள்ளது எனக்கு ஏதாவது உணவு கொடு என்றார் அந்த முதியவர். உமக்கு உணவு கொண்டு வருகிறேன். நான் மீண்டும் வந்து இப்பணியைத் தொடர்ந்து, இறைவனை சந்தித்தே தீருவேன் என சொல்லி அந்த பூக்கூடையை முதியவரிடம் கொடுத்துவிட்டு சென்றார்.

மகரிஷி வருவதற்குள் அவர் கொடுத்த பூக்களையெல்லாம் சூடி கொண்டு இந்த கடலிலேயே ஆதிசேஷனின் மேல் சயனித்திருக்கும் கோலத்தில் காட்சியளித்தார். மகரிஷி இந்த சிறியேனின் பக்திக்காக தாங்களே நேரில் வந்தீர்களா உங்களையா பூக்கூடையை சுமக்க வைத்தேன், என்னை மன்னித்து தங்கள் பாதத்தில் என்றென்றும் அமரும் பாக்கியம் தந்தருள வேண்டும் என வேண்டினார்.

பெருமாள் அவ்வாறே வரம் தந்து சயனத் திருக்கோலத்தில் காட்சி கொடுக்கவே தலசயனப் பெருமாள் என அழைக்கப்படுகிறார். உற்சவ பெருமாள் கைகளில் மொட்டுடன் இருக்கும் 108 திருப்பதிகளில் இவர் மட்டும்தான். தன் கையிலுள்ள தாமரையை மூலவரிடம் சமர்ப்பிப்பதாக ஐதீகம்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மாமல்லபுரம் சிறந்த கடற்கரை நகரமாக விளங்கியது. ஒரு காலத்தில் ஏழு கோயில்கள் இருந்தன என சொல்லப்படுகிறது. இவை கடல் சீற்றத்தால் முழுவதுமாக அழிந்து, பின் பல்லவ மன்னன் ராஜசிம்மன் மூன்று கோயில்களைக் கட்டினான்.

அதில் இரண்டு கடல் சீற்றத்தினால் அழிந்து ஒன்று மட்டும் மிஞ்சியது. பின் 14-ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களில் ஒருவரான பராங்குசன் மாமல்லபுர நகருக்குள் கோயில் கட்டி இங்கிருந்து பெருமானை பிரதிஷ்டை செய்தார்.

இங்குள்ள பெருமாள் தனது வலது திருக்கரத்தை தன் மார்பின் மீது உபதேச முத்திரையாக வைத்துள்ளார். இங்கு பல்லவர் கால சிற்பங்கள் மிகவும் அழகாக உள்ளது. இங்குள்ள பெருமாள் தரிசித்தால் திருப்பார் கடல் வைகுந்த நாதனை தரிசித்த பலன் கிடைப்பதாக ஐதீகம்.

Recent Post