திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோவில் முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது.

திருச்செந்தூர் கோவில் கோபுரம் 9 அடுக்குகளை கொண்டது. 157 அடி உயரம் கொண்ட இந்த கோபுரம் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

கோவில் அருகே வள்ளிக்குகை உள்ளது. இதில் உள்ள சந்தன மலையில் தொட்டில் காட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

திருச்செந்தூர் கோவிலில் உள்ள சண்முக விலாசம் என்ற மண்டபம் 124 தூண்கள் கொண்டது. இந்த மண்டபம் 120 அடி உயரமும் 60 அடி அகலமும் கொண்டது.

இக்கோவிலில் வீரவாகு தேவருக்கு பூஜை நடத்திய பிறகுதான் மூலவருக்கு பூஜை நடத்தப்படும்.

மூலவருக்கு தினமும் தூய வெள்ளை நிற ஆடையும் சண்முகருக்கு சிறப்பு பச்சை நிற அடையும் அணிவிக்கப்படுகிறது.

மூலவருக்கு பின்புறம் உள்ள சுரங்க அறையில் பஞ்சலிங்கங்களை காணலாம். இதற்கு பாம்பரை என்ற பெயரும் உண்டு.

24 அடி ஆழத்தில் உள்ள நாழிக்கிணற்றில் நீராடிய பிறகே கடலில் நீராட வேண்டும் என்பது ஐதீகம். கோவில் திருப்பணிக்காக தங்களது வாழ்நாளை அர்ப்பணித்த மவுனசாமி, காசிநாதசாமி, ஆறுமுகசாமி இவர்களின் சமாதி நாழிக்கிணறு அருகே உள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருப்பதாக வரலாற்று ஏடுகள் கூறுகின்றன.

மூலவர் தவக்கோலத்தில் இருப்பதால் அவருக்கு படைக்கப்படும் பிரசாதத்தில் காரம், புளி சேர்க்கப்படுவதில்லை. சண்முகருக்கு காரம், புளி சேர்ப்பதுண்டு.

முருகனின் ஆறுபடைவீடுகளில் ஐந்து கோவில்கள் மலை மீது இருக்கும். திருச்செந்தூர் கோவில் மட்டும் கடற்கரையோரம் அமைந்துள்ளது. இக்கோவிலில் முருகப்பெருமான் கடலை நோக்கி காட்சி தருகிறார்.

இந்து கோவில்களில் கிழக்குப்புற வாசல் இல்லாமல் மேற்குப்புற வாசல் கொண்ட ஒரே கோவில் திருச்செந்தூர் முருகன் கோவில்.

Recent Post