காஞ்சிபுரம் விஜயராகவப் பெருமாள் கோவில் வரலாறு

ஊர் -திருப்புட்குழி

மாநிலம் -தமிழ்நாடு

மாவட்டம் -காஞ்சிபுரம்

மூலவர் -விஜயராகவப் பெருமாள்

தாயார் -மரகதவல்லி

தீர்த்தம் -ஜடாயு தீர்த்தம்

திருவிழா – தை அமாவாசையில் தெப்ப உற்சவம், மாசியில் பிரம்மோற்ஸவம், ஆவணியில் பவித்ர உற்சவம், நவராத்திரி, திருக்கார்த்திகை.

திறக்கும் நேரம் -காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை.

தல வரலாறு

பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 58வது திவ்ய தேசமாகும். சீதையை ராவணன் சிறை எடுத்து செல்லும் வழியில், ஜடாயு சீதையை மீட்க போரிட்டு ராவணனால் வெட்டப்பட்டு மரணத்தருவாயில் இருந்த நேரத்தில், சீதையைத் தேடி அவ்வழியே வந்த இராம லக்ஷ்மண்ரிடம் ராவணன் கடத்திச் சென்ற விவரத்தை தெரிவித்து, தனது இறுதி காரியங்களை ராமரே செய்ய வேண்டும் எனவும், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக காட்சி தந்து அருள வேண்டும் என வேண்டி உயிர்விட்டது ஜடாயு.

இதன்படி ராமர் ஜடாயுவுக்கு ஈமக்கிரியைகளை செய்தபோது தீயின் வெப்பம் தாளாமல் ஸ்ரீதேவி தாயார் இடம் மாறியதாக புராணங்கள் கூறுகிறது. இத்தலத்தில் பெருமாளுக்கு இடது புறம் தாயார் சன்னதியும் வலதுபுறம் ஆண்டாள் சன்னதியும் அமைந்துள்ளது தனிச்சிறப்பு. ராமர் தன் அம்பினால் ஏற்படுத்திய தீர்த்தத்தில் ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்தார் எனவே இங்குள்ள தீர்த்தம் ஜடாயு புஷ்கரணி என அழைக்கப்படுகிறது.

மூலவர் தன் தொடையின் மீது ஜடாயுவை வைத்து அருள்பாலிக்கிறார். தாயாரிடம் குழந்தை பாக்கியம் வேண்டி ஜடாயு தீர்த்தத்தில் நீராடி மடப்பள்ளியில் வறுத்து நனைத்த பயிரை பெண்கள் தனது மடியில் கட்டிக்கொண்டு, இத்தலத்தில் தங்கி இரவில் உறங்க வேண்டும். பிறகு காலையில் அது முளைத்து இருந்தால் குழந்தை பாக்கியம் நிச்சயம் என சொல்லப்படுகிறது. இத்தலத்தில் அசையும் உறுப்புகளுடன் ஒரு கல் குதிரை வாகனம் உள்ளது. சிற்பக்கலையில் இது ஒரு அதிசயமாகும்.

உண்மையான குதிரை போலவே அசையும் உறுப்புக்களைக் கொண்டது. இதை செய்த சிற்பி இதுமாதிரி இனி யாருக்கும் செய்து கொடுப்பதில்லை என உறுதியுடன் இருந்து உயிர் விட்டாராம். எனவே இவரை நினைவு கூறும் வகையில் திருவிழாவின் எட்டாம் நாளன்று அவரது பெயர் கொண்டு பெருமாள் வீதி உலா வருகிறார்.

முன்னோர்களுக்கு அமாவாசை அன்று இத்தலத்தில் தர்ப்பணம் செய்தால் இரட்டிப்பு பலன் உண்டு என்று நம்பப்படுகிறது. ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்த தலம் என்பதால் அதற்கு மரியாதை செய்யும் விதத்தில் கொடிமரமும் பலி பீடமும் கோயிலுக்கு வெளியில் உள்ளது.

Recent Post